Tuesday, May 29, 2012

உயிர்மெய் நினைவுகள்...!


உயிர்மெய் நினைவுகள்..!

உன்னை முதன் முதலில்

நேருக்கு நேர் சந்தித்த வேளை...

மறக்கவியலாத ஒரு மாலைப் பொழுது...

தனிமைச் சிறையுடைத்து என்

இளமை சுதந்திரம் அடைந்த

இனிய பொழுதல்லவா அது....!


அருகினில் நெருங்கி வந்தாய்...

விழிவிற்களின் இமை நாண்களில் நீ

பூட்டி எய்திட்ட பார்வை அம்புகளில்

சிதறித் தெறித்தன என் இளமை உடலங்கள்...!

உன் இதழ்களெனும் சிப்பி சில

உயிர்மெய் முத்துக்களை உதிர்த்தபோது

என் உடல் முழுதும் வியாபித்தன

வியர்வையின் ஒளிச் சிதறல்கள்....!


உன் மந்திர வார்த்தைகளில்

வசமிழந்து வீழப் போன எனைக்

கை தந்து நிலை நிறுத்தினாய்...

என் கண்களில் கண்டேன் பல்லாயிரம்

பட்டாம்பூச்சிகளின் வண்ணக் கோலம்...!

தன்னிலை திரும்பி உயிர்

ததும்பி நின்ற அவ்வேளையில்

என்னைக் கடந்து செல்லத் துவங்கினாய் நீ....!

புன்னகைத்தாய் மழையாய்...

என் உயிரின் அடி வரை நனைந்தேன்......!

அந்த முதல் சந்திப்பின் நினைவுகள்

இன்றும் என் நெஞ்சினில்

அழிந்திடாத இலக்கியமாய்

அமர்ந்திருக்கக் காரணம்.....


நீ அன்று என்னுள் எழுதிச் சென்றது

நம் காதல் மடலின் முதல் வரி...!

காலம் பல கடந்தும் இனித்திருக்கும்

நம் கவிதை வாழ்வின் முகவரி...!

2 comments:

ஜா.முஹையத்தீன் பாட்ஷா said...

இந்த கவிதை என்னை உண்மையில் என் பழைய நினைவுகளில் ஆழ்த்திவிட்டது. சிறப்பான முதல் சந்திப்பு வாழ்த்துக்கள். காதலில் மூழ்கினாலே கவித்தேன் பொங்கும்.

ABUSAAEMA said...

தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரரே...!