Tuesday, July 3, 2012

கோடாரி மனம்



கோடாரி மனம்



இயற்கையின் வனப்பை 
எழில்வனத்தில் ரசிக்கத் தொடங்கினேன்… 

அழகானதோர் ஆறு…! 
அதன் இருமருங்கிலும் 
ஆழ வேரூன்றி அடர்ந்து 
நீண்டு நிற்கும் தாய் மரங்கள்…..

அவற்றை அண்மிப் படர்ந்து 
வளர்ந்திருக்கும் சேய்களாம் 
பசும்புற்கள்,செடி கொடிகள்…

கண்கள் காணும் உயரத்தில் 
கலைந்து மறைந்திடாத
வாணவேடிக்கை காட்டிடும்  
வண்ண மலர்ப் பட்டாசுகள்....

இன்னுமனந்தம் அழகு 
கொட்டிக் கிடந்தது… 
வர்ணிக்க வார்த்தைகளின்றி 
வனவெளியினில் அனாதையாய்...!

இயற்கையின் அழகமுதம் 
அள்ளிப் பருகிக் கொண்டிருந்த 
எனது கண்களில் தற்செயலாய்
மரக்கிளையிலையின் 
பச்சை நிறத்திற்குத் 
தன்னை மாற்றிக் கொண்டிருந்த 
ஒரு பச்சோந்தி காட்சியானது…

பச்சோந்தியின் பசுமையை 
முழுமையாய் உள்வாங்கிய
மனவானரம் இப்போது 
தாவிக் குதிக்கத் தொடங்கியது...

அழகினை ரசித்த 
கவிதை மனமன்றத்தில் மெதுவாக 
அரங்கேறத் துவங்கின 
அழுக்கான மனித அபிலாசைகள் பலவும்…

உருண்டு திரண்டு 
ஓங்கி வளர்ந்த மரங்களின் 
எண்ணிக்கையும்.. அவற்றை
வெட்டி விற்றால் வரும் 
பணக் குவியலும் மட்டுமே 
இப்போது காட்சிகளாய்
என் மனக் கண்களில்…..

பச்சோந்தி மனதின் பசப்பும்
கோடாரி மனதின் கொடூரமும் அறியாத 
குணமகளாம் வனமகளோ 
காற்று நீவி விடும்
தன் வண்ணமலர்க் கூந்தலழகை 
ஆற்றுநீர்க் கண்ணாடியில் பார்த்து 
ரசித்துக் கொண்டிருக்கிறாள் 
எப்போதும் போல் அப்பாவியாய்.....!

Sunday, June 17, 2012

மிஹ்ராஜ் எனும் அதிசயம்.!


மிஹ்ராஜ் எனும் அதிசயம்.!
---------------------------------------
புனிதப் பயணங்களில்
தலையான பயணமிது....!

மனிதருள் புனிதரும் அவர்தம்
மன்னவனும் சந்தித்துக் கொண்ட
முத்தான நிகழ்வு முகிழ்ந்த தருணமிது....!

முன்பின் இலா மூத்தோனும் அவனின்
அன்பின் உருவான நம் அண்ணலும்
தத்தம் பரஸ்பர நேசம் வெளிப்படுத்தியமை கண்டு
விண்ணோரும் மண்ணோரும்
வியந்து மகிழ்ந்த பயணமிது.....!

பொறுமைக் கடலாம்
நம் பூமான் நபிகளின்
இப்புனிதப்பயணம் இன்றுவரை
பூலோக விஞ்ஞானத்தால்
புரிந்து கொள்ளவியலாத புதிர்ப்பயணம்...!

புண்ணிய நபிகளின்
இவ்விண்ணேற்றப் பயணம்
ஆண்டவனை அறிந்திடும்
ஆன்மிக அகமியமெனும்
முன்னேற்றத்திற்கான பயணப் பாதையில்
முதல் மைல் கல்லானது....!

மிஹ்ராஜ் இரவுப் பொழுது.....

ஹபீபும் அவர்தம் மஹ்பூபும்
ஹுப்பில் இணைந்த இனிய பொழுது...!

அஹதும் அஹமதும்
அண்மிக் களிப்புற்ற ஆனந்த வேளை...!

இப்பயணம் நிகழ்ந்தது ஓர்
இருள் நிறைந்த இரவில்தான்...

எனினும் அது....

ஒளியுறை அருளாளனும் அவன்
ஒளிநிறை அருளானவரும்
கூடிக் கதைத்த ஒளிப்பிரவாகத்தால்
அருளொளிவெள்ளம் நிரம்பி
வழிந்த வண்ண இரவானது.....!

மிஹ்ராஜ் இரவுப் பொழுது.....

பைத்துல் முகத்தஸில்
நபிமார்க்கெல்லாம் நாயகமாக்கி
அழகு பார்த்த ஆண்டவன் நம்
அண்ணலின் அழகு முகம் காண
அழைத்து அகமகிழ்ந்த பொழுது இது..!

அல்லாஹ்வையும்,
சுவர்க்க நரகங்களையும்
நேரில் கண்ட சாட்சியாளராய்
நம் அன்பு நபிகளை
ஆக்கித் தந்த அரிய பொழுது இது....!

காருண்ய நபிகளின்
மிஹ்ராஜெனும் இப்பயணம்
காலம்,திசை,இடம் என்ற
உலகியல் எல்லைகளுக்குள்ளும்
காற்று,கிரகங்களெனும்
வானியல் எல்லைகளுக்குள்ளும்
அடங்காத அற்புதப் பயணம்....!

மன்னவனைக் கண்டு
மண்ணகம் மீண்ட எம்பெருமானும்
மறுமையில் விசாரணை நாளில்
மீஸானில் கனமாக்கும்
தொழுகையெனும் பரிசிலை
மாந்தர்க்காய்ப் பெற்று வந்த
மேலான பயணமே மிஹ்ராஜாம்.....!

மிஹ்ராஜின் சிறப்பெலாம்
மேன்மக்களே படித்தறிந்தீர்....இனியேனும்
மிஹ்ராஜால் மேன்மையுற்ற
சிராஜும் முனீராம் எம்
நாயகத் திருமேனியவர்கள்
நம்மைப் போன்ற மனிதரில்லை
நானிலத்தோரே நன்குணர்வீர்....!

Tuesday, May 29, 2012

உயிர்மெய் நினைவுகள்...!


உயிர்மெய் நினைவுகள்..!

உன்னை முதன் முதலில்

நேருக்கு நேர் சந்தித்த வேளை...

மறக்கவியலாத ஒரு மாலைப் பொழுது...

தனிமைச் சிறையுடைத்து என்

இளமை சுதந்திரம் அடைந்த

இனிய பொழுதல்லவா அது....!


அருகினில் நெருங்கி வந்தாய்...

விழிவிற்களின் இமை நாண்களில் நீ

பூட்டி எய்திட்ட பார்வை அம்புகளில்

சிதறித் தெறித்தன என் இளமை உடலங்கள்...!

உன் இதழ்களெனும் சிப்பி சில

உயிர்மெய் முத்துக்களை உதிர்த்தபோது

என் உடல் முழுதும் வியாபித்தன

வியர்வையின் ஒளிச் சிதறல்கள்....!


உன் மந்திர வார்த்தைகளில்

வசமிழந்து வீழப் போன எனைக்

கை தந்து நிலை நிறுத்தினாய்...

என் கண்களில் கண்டேன் பல்லாயிரம்

பட்டாம்பூச்சிகளின் வண்ணக் கோலம்...!

தன்னிலை திரும்பி உயிர்

ததும்பி நின்ற அவ்வேளையில்

என்னைக் கடந்து செல்லத் துவங்கினாய் நீ....!

புன்னகைத்தாய் மழையாய்...

என் உயிரின் அடி வரை நனைந்தேன்......!

அந்த முதல் சந்திப்பின் நினைவுகள்

இன்றும் என் நெஞ்சினில்

அழிந்திடாத இலக்கியமாய்

அமர்ந்திருக்கக் காரணம்.....


நீ அன்று என்னுள் எழுதிச் சென்றது

நம் காதல் மடலின் முதல் வரி...!

காலம் பல கடந்தும் இனித்திருக்கும்

நம் கவிதை வாழ்வின் முகவரி...!

Saturday, May 26, 2012

கவிதை அரங்கேற்றம்..!


கவிதை அரங்கேற்றம்..!


நானொன்றும்

புகழ்பெற்ற கவிஞனல்ல....எனினும்

நான் எழுதிய சில

கவிதைகளைக் கண்டு மகிழ்ந்து - என்னைக்

கவி பாட அழைத்திருந்தனர்

கவியரங்கம் ஒன்றில்

அழைப்பிதழ் அனுப்பித் தந்து.....!

சற்றே கால தாமதமாகச்

சென்று அரங்கம் சேர்வதற்குள்

கவியரங்கம் ஏற்கனவே தொடங்கியிருந்தது...

கவிஞர்கள், சுவைஞர்கள் எனப்

பெருங்கூட்டமே திரண்டு

கூடியிருந்த மாபெரும் சபைதனில்

கவிஞர்கள் பலரும் தம்

கவிதைகளை அரங்கேற்றினர்

பலத்த கரகோஷத்திற்கிடையே....!

என் முறையும் வந்தது....

மேடையேறினேன்....

கவிதை கொண்ட காகிதத்தைப் பிரித்தேன்...

மனதுக்குள் வாசிக்கத் துவங்கினேன்....!

சில நிமிடங்கள் தொடர்ந்தது என் மவுனம்.....

மேடையிலும்.....பார்வையாளர் அரங்கிலும்

தொடங்கியது சலசலப்பு....!

மேடையில் சிலர் பேசினர் தங்களுக்குள்....எனினும்

என் காதுகளை அவைத் துளைத்திட்டன.....

"என்ன திமிர் இவனுக்கு...?

மேடையேறி மவுனம் சாதிக்கிறான்....!"

"மேடை நாகரீகம் இல்லாத

இவனை யார் கவிதை பாட அழைத்தது...?"

இன்னும் பல விமர்சனங்கள்.....

பார்வயாளர் தரப்பிலிருந்தும்

பாய்ந்து வந்து என் செவிப்பறையைத் தாக்கின...!

"இவனெல்லாம் எதற்கு

கவிபாட வந்தான்...?"

"கவிஞர் பெருமக்கள் கூடி

கவிபாடிடும் சபையில்

காட்டான் இவனுக்கென்ன வேலை...?"

"கவிதை பாடத் தெரியாத

கபோதி இவனுக்கு

கவியரங்க மேடை ஒரு கேடா...?"

இன்னும் பல அர்ச்சனைகள்

சுற்றிலும் எனைச்

சூழ்ந்து கொண்டிருக்கையில்

வாய்ப்பு தந்து மேடையேற்றி

என்னைக் கவிபாடச் செய்த

கவிஞர் என்னருகில் வந்தார்...!

பதறிய நிலையினராய்

என் பக்கம் நெருங்கி வந்து கேட்டார்...

"என்ன நேர்ந்திட்டது உனக்கு....?

ஏன் என் மானத்தை

சபையினில் சந்தி சிரிக்கச் செய்கிறாய்...?"

அவர் மேலும் ஏதோ

சொல்ல வாயெடுக்குமுன்

நான் கூறினேன் அவரிடத்தில்....

பொறுமையாயிருங்கள்...

இப்போது கவி பாடுவேனென்று...

என் பதிலில் அரைகுறையாய்

திருப்தியடைந்த அவரும்

அரங்கில் அனையோரையும்

அமைதிகாக்கும்படி வேண்டினார்...

அரங்கில் சற்றே

அமைதி திரும்பிட

அவையோரை நோக்கி நானும்

கவிபாடத் துவங்கினேன்....

உணர்ச்சிகரமாய் பாடி முடித்தேன்....

கேட்டதும் அனைவரின்

முகத்திலும் வியப்பின் குறியீடுகள்....!

சற்று நேரத்திற்கு முன் எனைத்

தூற்றி ஆர்ப்பரித்து அடங்கிய சபை

இப்போது மீண்டும்

ஆர்ப்பரிக்கத் தொடங்கியது

எனை வாழ்த்திக்

கரவொலியினில்......!

கவிதையின் வரிகள் இவைதாம்...

தலைப்பு: மவுன மொழியில் ஒரு கவிதை....!

"மவுனம் என்பதே வார்த்தைகளற்ற

ஓர் உணர்ச்சிக் கவிதை தான்....!

மவுன மொழியினில்

கவி பாடிய என் மீது

உதட்டு நாண்கள் கொண்ட

உங்கள் வாய்விற்களிருந்து

பாய்ந்து வந்த வார்த்தை அம்புகள் -எனைப்

புண்ணாக்கிப் பிணமாக்கின....எனினும்

என் கவிதையும் அரங்கேற்றம் கண்டது

ஆம்...

பொறுமையிழந்து நீங்கள்

ஆர்ப்பரிக்கத் துவங்கு முன்....

என் மவுனம் இச்சபை கலைக்கும் முன்...

என் கவிதையும் அரங்கேற்றம் கண்டது...!"

Friday, May 11, 2012

தூர தேசத்திலிருந்து துணைவிக்கு ஒரு துக்க மடல்.


தூர தேசத்திலிருந்து துணைவிக்கு ஒரு துக்க மடல்.
---------------------------------------------------------------------------------

ஆயிரம் பேரிங்கு என்னை
அணைத்துக் கொள்கின்றனர்
அவ்வப்போது
நட்பு பாராட்டியே... எனினும்
என் மனம் அவர்தம் அணைப்பை
பொருட்படுத்துவதில்லை.

எதிர்ப்படும் தோழரனைவரும்
என்னோடு
கை குலுக்கிக் கொள்கின்றனர்
அன்பின் அடையாளமாய்... எனினும்
என் உள்ளத்தில் ஒரு அசைவுமில்லை.

சந்திக்கும் அனைவரும்
என்னிடம்
சரீர நலம் விசாரித்துச் செல்கின்றனர்
சகஜமாய்த்தான்... எனினும்
எனக்கவை சாதாரணமாகத் தோன்றுவதில்லை

இவ்வாறான

தளர்ச்சி,மந்தநிலை, துக்கம் மற்றும்
அதிருப்தியென எனைச் சூழ்ந்திட்ட
இயலாமைகளின் மூலகாரணம்
நீயானது குறித்து
ஆரும் வெளிப்படையாய்
அறிந்திருக்கவில்லை.

உயிரின் அடி வரை
உயரழுத்த மின்சாரம் பாய்ச்சிடும்
உன் உன்னத ஸ்பரிசம்
கிட்டாது போய் பல வருடங்களானதால்
இப்போது என்னில் இல்லை
உணர்வுகள் எதுவும் உயிரோடு..!

உயிரும் மெய்யும்
உன்னோடு முழுதாய்
தந்து விட்டதாலோ என்னவோ
உணவுண்டு உயிர்வாழ்ந்தும்
உணர்வற்ற ஜடமாகவே இங்கு நான்
உலாவிக் கொண்டிருக்கிறேன்..!

தூரங்கள் நமைப் பிரித்து
துயர் தருகின்ற இப்பொழுதுகளில்
மன பாரங்கள் இறக்கி வைப்பதென்னவோ- நம்
மழலையின் கொஞ்சும் சிரிப்பின் நினைவும்
மாதத்தில் சில முறைகள்
தொலைபேசி வழியே வரும்
மாறாத உன் அன்பின் விசாரிப்பும் தாம்...!

பண்டிகை தினங்கள்
கொண்டாட்டங்கள் பலவும்
பணியின்றி விடுப்போடு
மகிழ்ந்திடவே வந்தாலுமவை
பக்கத்தில் நீயிருந்து
பரவசம் தரவில்லையாதலால்
பத்தோடு பதினொன்றாய்
எப்போதும்போல் வந்து கழிகின்றன...!

மனம் கொண்டு மணம் கொண்ட
மல்லிகையுன்னை வாட விட்டுவிட்டு
மனமின்றி அயல் தேச மண்மிதித்து இன்று
அகங்கார முதலாளி வீட்டீன்
அலங்காரத் தோட்டத்திற்கு
அடியேனும் நீர் பாய்ச்சிக்கொண்டிருக்கின்றேன்...!

ஒரு முறை "மடையன்"எனச் சொன்ன
உடன்பிறந்த சகோதரனை அறைந்து
கன்னம் சிவக்கச் செய்த கோவக்காரனாய்
வீட்டிலென்னைக் கண்டிருக்கிறாய் நீ..! -இங்கோ
அகந்தை கொண்ட முதலாளியெனை
ஆயிரமுறை "மடையன்" என்றபோதும்
ஆர்ப்பரிக்காது அமைதி காக்கிறேன்....காரணம்
அவன் தரும் சில ஆயிரங்களில்
என் தன்மான உணர்வுகளனைத்தும்
மரத்துப்போய் விட்டதால்...!

நரக வேதனையில் உழன்றிங்கு
நலிந்தே பல ஆண்டுகள் கழித்து
நரம்புகள் தளர்ந்து
நாடிகள் சுருங்கியபின் உனை
நாடி வந்து சேர்ந்தால்
நன்மையுண்டோ...?
கோடிக் கணக்கில் பணம்
கொண்டு வந்து சேர்த்தாலும்
குணம் கெட்ட பலம்
அப்போது நலம் பெறுமா...?
என் சொல்வேன் என் நிலைமை...?

அழுது தீர்க்கும் ஆற்றாமையை
எழுதியே தீர்த்து இருக்கின்றேன்
பழுது ஏதுமின்றி விரைவாகவே- உன்
பக்கம் ஏகி உனைச் சேர்ந்திட
படைத்தோன் இறையிடம்
பரிசுத்த மனதினாய் பணிவுடன்
பகலிரவு நேரங்களனைத்திலும்
தொழுது வழுத்திடுவாயடி என்
துணையான தோழி நீயுமே ...!

Monday, May 7, 2012

ஒரு கவிஞனின் க(வி)தை !


ஒரு கவிஞனின் க(வி)தை !

என் படிப்பறையில்
ஒரு நாள்...
இரவு நேரம்
நல்ல நிசப்த வேளை.....!

மின்விசிறியின் அலைக்கழிப்பில்
அங்குமிங்கும் திரும்பிக் கொண்டிருந்தது...
மேசை மீது கனத்தினடியில் வைக்கப்பட்டிருந்த
என் கவிதை தாங்கிய காகிதம்...!

காகிதத்தின் அருகில்
நல்லதோர் கவிதை எழுதி முடித்த
வெற்றிக் களிப்பில் ,களைப்பில்
மூடியினுள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது என் பேனா....!

மேசை அடியினில்
குப்பைக் கூடையில் மொத்தமாய்க்
கொட்டிக் கிடந்தன...
நான் கசக்கி எறிந்திட்ட
நிறையக் காகிதங்கள்...!

அறையிலிருந்து
வெளியில் சென்று
திரும்பிய நான்
தற்செயலாக
படிப்பறையின் வாயிலில்
கால் வைத்த போது
அறையினுள் நிகழ்ந்த
ஒரு விசித்திர உரையாடலைச்
செவியுற்று வியப்பில்
வாசலில் அப்படியே நின்றேன்...!

குப்பைக் கூடைக் காகிதங்கள்
மேஜைக் காகிதத்திடம் ஒருமித்துக் கூறத் தொடங்கின....!

" நாங்களும் உன் சகோதரிகள்தான் -இதோ
இந்தப் பேனாவின் சொந்தக்காரன்
உன்போல் எம்மையும் மணமுடித்து
சிந்தனை மையல் கொண்டு
பேனாவின் 'மை' கொண்டு
எமை மருவியதில்
கருத்து எழுத்துக்களைக் கருக்கொண்டு
கவிதைக் குழந்தைகளை உருக்கொண்டு
உன் போலவே நாங்களும் பெற்றெடுத்தோம்...! "

எனினும் அவை.....

"நிறை மாத சிசுக்களாயில்லை எனக் கூறி
குறை தன்னுள் கொண்ட அவனே
 எமைக் குற்றவாளிகளாய்த் தீர்மானித்து
குடும்ப விலக்கும் செய்து எம்மைக்
குழந்தைகளுடன் குப்பையில் வீசி எறிந்து விட்டான்...!."

"எம்மில் குறை கண்ட அனுபவத்தில்
சிந்தனைப் பலவீனத்திற்கு அவன்
சிகிச்சை செய்து கொண்டு
சிறப்பாய் உன்னை மருவியதில்
சீக்கிரம் கருக்கொண்ட நீ
நல்ல உருக்கொண்ட நயமான
கவிதைக் குழந்தையைப்
பெற்றெடுத்துக் கொடுத்ததால்
உனக்கு மணவிலக்கும் இல்லை
குப்பைக் கூடை வாசமும் இல்லை..."

"நீ வேண்டுமானால் பார் சகோதரி....!"

"இன்னும் சிறிது நேரத்தில் எமைக்
குப்பை வண்டிகளில் ஏற்றி
அனாதைகளாக்கிவிட்டு -உன்னை மட்டும்
முத்தமிட்டுப் புகழ்ந்து போற்றுவான்..! - நீ
பெற்றெடுத்த குழந்தையாம்
கவிதையை பெருமையாய்
சபைதனில் அரங்கேற்றுவான்..!."

"எமக்குத்தான் இனி ஜீவனுமில்லை...!
ஜீவானாம்சமும் இல்லை...!
என்ன செய்வது சகோதரி...?"

மனவருத்தம் தான் எனினும்....

"நாங்கள் வாழாவெட்டிகளாய் மரித்தாலும்
உன்னையேனும் சுமங்கலியாய்
வாழக் கண்டதில் மகிழ்ச்சி எமக்கு..!- நீ
நிரம்பக் குழந்தைகளுடன் நீடூழி வாழ்க.....!"

இத்துடன் உரையாடல்
நிறைவுற்ற வேளை.....
வியப்பிலிருந்து விடுபட்ட நான்
படிப்பறையின் உள் சென்றேன்....

பதறிய சிந்தனையுடன் பாய்ந்த நான்
கவிதை கொண்ட காகிதத்தைப்
பெட்டியினுள் பூட்டி
பத்திரப் படுத்தினேன்...!

குப்பைக் காகிதங்களை வேகமாய்
அவ்வறையை விட்டும்
அப்புறப் படுத்தினேன்....!

காகித உரையாடல் தந்த
குற்ற உணர்வில்
தலை கவிழ்ந்த நான்....

நாளைய..
கவிதை அரங்கேற்றக் காட்சி

கண் முன் மின்னலாய்த்
தோன்றி மறைந்திடத்

தலை நிமிர்ந்தேன்...
கவிஞனாக.....!

Sunday, April 29, 2012

வேர்களை மறந்த விழுதுகள்...!


வேர்களை மறந்த விழுதுகள்...!

  விட்டில்கள் அநேகம் ஒன்று கூடி
  விளக்குகளின் ஒளி அணைத்திட நினைத்ததாம்

   மீன்களனைத்தும் ஒன்று கூடி
   நீர்நிலைகளைப் புறக்கணிக்க நினைத்ததாம்

   மேகங்களனைத்தும் ஒன்றிணைந்து
   வானத்தை விலக்கிவைக்க நினைத்ததாம்

   இவைபோலல்லவா உள்ளன நம்மில் சிலரின்
   நபிகளை,நல்லோர்களை மறந்த சிந்தனைகள்

   இவைபோலல்லவா உள்ளன நம்மில் சிலரின்
   நபி புகழ்,நாதாக்கள் புகழ் மறைத்த போதனைகள்

   மேற்கண்ட முயற்சிகள்தாம் கைகூடுமோ...?
   மேதினியில் வாகைதான் அவை சூடுமோ...?

   வறண்ட மனபூமியின் ஆழம் துளைத்துப் பரவி
   வளமான மண்பூமிமேல் இஸ்லாமிய மரமாய்
   உன்னை நிற்க வைத்தது இறைநேசரெனும் வேரடா...!

   வேர்தனை மறைத்து மண்மீதினில்
   விருட்சமாய் வளர்ந்த இறுமாப்பில்-அடியோடு
   வேரைப் பிடுங்கிட நினைத்தால் வீழ்வாயடா....!

   குர்ஆனும் ஹதீதும் நம் வழிகாட்டிகளென்றாய் நீ ..பின் ஏன்
   குர்ஆனாகவே வாழ்ந்த எம் ஹபீபினைப் புகழ மறுக்கின்றாய் ...?

   சன்மார்க்கக் கடலின் நுரையள்ளிக் குடித்துவிட்டே
   சகலமும் அறிந்ததுபோல் ஆர்ப்பரிக்கும் உனக்கு
 
   ஆன்மீகக் கடலின் ஆழ் முத்தெடுத்த
   அடக்கப் பணிவுநிறை இறைநேசர்களெனும்

   ஆன்றோரின் அறிவுப் புலமைகள்
   அகமிய ஞானங்கள் எங்கனம் விளங்கும்....?

   திரும்பிடுவீர் திசை மாறிச் சென்ற எம் சகோதரர்களே..!
   விரும்பிடுவீர் மேன்மையான நற்செயல்கள் புரிந்திடவே...!
 
   நம் ஈமான்கள் முற்றாய் பாதுகாக்கப் பட்டு
   இகபர வாழ்வினில் இனிதாய் வாகை சூடிட

   இஸ்லாமியராய் நம்மையெல்லாம் திகழச் செய்த
   இறைநேசப் புனிதர்களின் வழி நடப்போம்...!

...................................................................................................................................

Wednesday, April 18, 2012

அருளென்ற மழையிலே....!


அருளென்ற மழையிலே....!


அருளென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அருமை நபி தோன்றினாரே....!
அருளாளன் இறைவனின் அன்புநிறைத் தூதராய் அகமதுவும்
தோன்றினாரே....!
அனலான பாலையில் புனலொன்று தோன்றுமோ அழகுநபி தோன்றினாரே....!
மக்காவின் மீதினில் மாண்புயர் மன்னராய் மஹ்மூதர் தோன்றினாரே...!

அருளென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அருமை நபி தோன்றினாரே...!
இருளான மாந்தர்தம் இதயங்கள் ஒளிரவே இனியநபி தோன்றினாரே...!
(இனியநபி தோன்றினாரே...! )

சூரியனும் சந்திரனும் ஒன்றாகித் தோன்றுமோ ஒளிநபிகள் தோன்றினாரே...!
தூய்மையும் வாய்மையும் ஒன்றான தன்மையாய் தாய்நபிகள்  தோன்றினாரே...!
கஷ்டங்கள் போக்கிடும் சலவாத்தின் காரணராய் கவின் நபிகள் தோன்றினாரே...!
நஷ்டங்கள் இன்றியே நம்மைக் கரைசேர்த்திட நாதர்நபி தோன்றினாரே...!
  
 அருளென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அருமை நபி தோன்றினாரே....!
அருளாளன் இறைவனின் அன்புநிறைத் தூதராய் அகமதுவும்
தோன்றினாரே....!
அனலான பாலையில் புனலொன்று தோன்றுமோ அழகுநபி தோன்றினாரே....!
மக்காவின் மீதினில் மாண்புயர் மன்னராய் மஹ்மூதர் தோன்றினாரே...!



Friday, April 6, 2012

மஃஹ்மூதரின் மாண்பினைப் போற்றிடுவோம்


மஃஹ்மூதரின் மாண்பினைப் போற்றிடுவோம்
-------------------------------------------------------------------------------------------------------------

க்கத்துச் சோலையில் மாணிக்கமாய் மலர்ந்து
மாந்தர்தம் உள்ளங்களில் மன்னராய் மகுடம் சூடி
மிஹ்ராஜ் இரவினில் மேலோனைக் கண்டு மீண்டு
மீசானில் கனமாக்கும் தொழுகையை நமக்களித்து
முன்னோரின் சிலை வணக்கம் முற்றிலும் ஒழித்து
மூப்பில்லா இறையோனின் ஒருமைப் பண்புணர்த்தி
மென்மை வாய்மை தகைமையுடன் தீனை
மேன்மையாய் மக்கள் உள்ளங்களில் வளரச் செய்து-உலகத்தின்
மையலில் கறை படிந்த இதயங்களையெல்லாம் -தன்
மொழியமுதம் கொண்டு சுத்தப் படுத்தி -இம்மையின்
மோகங்களை விட்டும் மக்களைத் தூரமாக்கி
மெளலாவாய் எம்மை நேர் வழி நடத்தும்- மதீனா வாழ்
மஃஹ்மூதரின் மாண்பினைப் போற்றிடுவோம்.

அல்லாஹீம்ம ஸல்லி அலா முஹம்ம தினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வஸல்லிம் தஸ்லீமா,,,,!

Sunday, April 1, 2012

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்




காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கல்பு பரிசுத்தம்நிறை
காத்தமுன் நபிகளின்
கனிவான தரிசனம்
கனவினில் கண்டிடவே...!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காரணப் பெயர்கொண்ட
காவிய முஹம்மதெனும்
கருணை வள்ளலின்
கவின்முகம் கண்டிடவே...!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கஷ்டங்கள் நீக்கிடும்
காரண சலவாத்தின்
கருவியாம் அஹமதின்
காதலைப் பெற்றிடவே...!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கணக்குகள் தீர்க்கப்படும்
கடுமைநிறை மறுமையில் -கைவிடாதெமைக்
கரைசேர்த்திடும் மஹ்மூதரின்
கனிந்த பரிவினை இகத்திலும் பெற்றிடவே...!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காலமுள்ள காலமெல்லாம்
கண்ணியமாய்ப் புகழப்படும்
காருண்ய நபிகளின் கரம்பற்றி முத்தி
கண்களில் ஒற்றிடவே....!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காப்போனின் காதலரை
காசினியின் நாயகரை
கண்குளிரக் கண்டு
களிப்பேருவகை கொண்டிடவே...!

காணாப் பிணி கொண்டு
கவிபாடும் இவ்வெளியவன் மீது
கழிவிரக்கம் கொண்டு
கல்பு குளிர்ந்திடக் கனவினில் வருவீரே
கண்கொள்ளாக் காட்சி தருவீரே...!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!

Friday, March 23, 2012

சிந்தனை செய் மனமே….! சீர்மிகும் நபிகளைப் புகழ்ந்திடு தினமே..!


சிந்தனை செய் மனமே….! சீர்மிகும் நபிகளைப் புகழ்ந்திடு தினமே..!

நபியே! உங்களை அல்லாஹ்வின் பால் அவனின் ஏவலைக் கொண்டு அழைக்கும் அழைப்பாளராகவும் ,பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை நாம் அனுப்பியுள்ளோம்).   (அல் குர்ஆன்:33-46)

உங்களின் பால் ஒளியும்,தெளிவான திருவேதமும் வந்துவிட்டது.
                                                   (அல் குர்ஆன்:5-15)

சிந்தியுங்கள்…..மேற்கண்ட திருமறையின் வசனங்களை…..!

சிந்தனை செய் மனமே….! சீர்மிகும் நபிகளைப் புகழ்ந்திடு தினமே..!

மனிதனெனும் படைப்பு
உடலுயிர் இவற்றின் பிணைப்பு !

உடலென்பது சுதேசியாம்
உயிரென்பது விதேசியாம் !

உடலூட்டம் மண்ணகத்து உணவுகளினாலெனில் 
உயிரூட்டம் நபியொளி,திருமறையெனும்
விண்ணகத்து உணவுகளினாலாம்.!

உடல் வளர்த்தல் உலக வாழ்க்கைப் பயனெனில்
உயிர் வளர்த்தல் இகபர வாழ்க்கைப் பயனாம்.!

படைத்தவனின் நெருக்கம் வேண்டுமெனில்
பண்புயர் நபியை உயிரினுமேலாய் நேசியுங்கள்…!

அதிபதியின் சுவனபதிப் பேற்றை அடைந்திட
மதிநபியின் மொழியமுதம் நாளும் வாசியுங்கள்…!

இறை தந்த அருட்கொடையாம்
திருமறையை இனிதே நமக்கீந்து

அருள்மறையாகவே முற்றிலும்
அவனியில் வாழ்ந்து காட்டிய

அண்ணலின் ஸுன்னத்தை
உயிர்வளியாய் சுவாசியுங்கள்..!

அஹமதைப் புறந்தள்ளி
ஆண்டவனை நெருங்கிடலாமென்று
இகமதில் நிகழாச் சொப்பனம் காணாதீர்..!

முஹம்மதிய அருட்கோலம் களைந்து- இழிந்த
முஷ்ரிக்கெனும் இருட்கோலம் பூணாதீர்..!

பொய்ஜாலங்களில் உலகைக் கவர்ந்தது போதும் ! -இனியேனும்
மெய்வழி நடக்க கைப்பிடிப்போம் மன்னர் நபி போதம்..!

முன்பின் இலா மூத்தோனும் புகழ்கின்ற
முத்து முஹம்மதைப் புகழ்ந்திடுவோம் அனுதினமும்…!

மன்னவனும்,விண்ணவரும் மாசற்ற நபி மீது
மகிழ்ந்து மொழிந்திடும் மகிமைநிறை ஸலவாத்தை

மனதுடனே நாமும் மொழிகின்ற எந்நாளும்
மண்ணகத்தில் நமக்குப் பொன்னாளாம்…திருநாளாம்..!

ஸல்லல்லாஹு..அலா…முஹம்மத் 
ஸல்லல்லாஹு…அலைஹி…வஸல்லம்..!

ஸல்லல்லாஹு…அலா…..முஹம்மத் 
ஸல்லல்லாஹு…அலைஹி….வஸல்லம்..!

ஸல்லல்லாஹு…அலா….முஹம்மத் 
யா ரப்பி ஸல்லி அலைஹிவஸல்லம்..!

Wednesday, March 21, 2012

மகாமன் மஹ்மூதும் எம் பெருமானும்




சாந்த சொரூபியாம் எம் சற்குண நபி போல்
காந்தமாய் அனைவரின் உள்ளம் கவர்ந்தவர் என்று
விரல் சுட்டும்படி ஆருமில்லை
விண்,மண்,அண்டம் முழுவதிலும் !

படைத்தவனைப் பாரோர்க்கு காண்பிக்கவே
படைத்தவனின் ஒளியாக வந்தனரே
அகிலத்திற்கே அருட்கொடையாகவும்-அவனியோர்க்கு
அழகு முன் மாதிரியாகவும் திகழ்ந்தனரே !

முன்சென்ற நபிமார்கள் காலத்தில் -அவர்க்கு
முரண்பட்டு எதிர்த்த கூட்டத்தின் கொடுந்துன்பம் கண்டு
இறையோனும் அவர் மேல் சினம் கொண்டு -அம் மக்களை
இல்லாமல் அழித்திட்ட கதைகள் பலவும் உண்டு !

தக்காரும் மிக்காரும் இல்லாத நம் தலைவரோ
தமக்கு இன்னல் பல புரிந்த வைரிகளுக்கும்
கருணையுடன் நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கி
இறையோனிடம் அவர்க்காய் துஆச் செய்தனரே !

தாயிப் நகரத்து மாந்தர்கள் அன்று -நம்
தாஹாவைக் கல்வீசி விரட்டி அடித்த கொடுமை கண்டு
வானவர் ஜிப்ரில் வள்ளலிடத்தில் முறையிட்டார் -ஆணையிட்டால்
மலைகளை புரட்டி அந்நகரையே மண்ணில் புதைத்திடுவேன் என்று !

மன்னர் நபி நாதரோ அம்மக்களை அழித்திட மறுத்தனரே
மக்களிழைத்த கொடுமைகள் அனைத்தையும் பொறுத்தனரே
வானவர் கோனை வழி திரும்பிடப் பணித்தனரே -அம் மக்களின்
பிழை பொறுத்து மன்னித்திடவே இறையை வழுத்தினரே !

இவ்வாறெல்லாம்....

வேறெந்த நபிகளிடமும் இல்லாத பொற்குணங்கள் கொண்டதினால் –நம்
வேந்தர் ரசூலுக்கு வேதம் நல்கிய வல்லோனும் -மறுமையில்
பெருமைநிறை "மகாமன் மஹ்மூத்" எனும் உயர்பதவிப் பரிசிலை -தன்
திரு மறையினில் வாக்குறுதியாய் மொழிகின்றான் !

மறுமையில் மஹ்சரின் விசாரணையின்போது –தம் உம்மத்திற்காய்
மகாமன் மஹ்மூதில் இனிதமர்ந்து பரிந்துரைப்பாரே
தம் உம்மத்தின் இறுதி நபரை நரகம் விடுவிக்கும் வரையிலும்
தம் தலை தாழ்த்தி மன்னவனை வேண்டிடுவாரே !

ஏனைய நபிமாரனைவரும் தமக்காக இறையிடம் கெஞ்சும் போதும்
எம் கோமான் தம் உம்மதிற்காக உள்ளம் உருகி இரஞ்சுவாரே
உம்மத்தின் பிழை பொறுத்து சுவனம் நல்க வேண்டிடுவாரே
உடனடியாய் அவரின் பரிந்துரை கபூலாகுமே காப்போனிடத்தில் !

அவர்தம் புனிதக் கரங்களில் "லிவாவுல் ஹம்தெனும்"
புகழ்கொடி வழங்கப்படுமே அதன் நிழல்தனில் -அன்பியாக்களும்
அவ்லியாக்களும்,சாலிஹீன்களும்அணிவகுத்திடுவனரே
அருமை நபிகளின் அடியொற்றி சுவனம் புகுந்திடுவனரே !

மறுமையின் வெற்றியை ஈட்டித்தரும் மாநபியின்
வஸீலாவை வல்லோனிடம் வேண்டிடும் பாங்கு துஆ அதுவேதாம் - நாமும்
மறுமையில் மஹ்மூதரின் பரிந்துரைக்குக் காரணமாகும்
பாங்கு துஆவை பாங்குடன் மறக்காமல் ஓதிடுவோம்.

Sunday, March 18, 2012

கரையும் நேரம்


கரையும் நேரம் 

பரஸ்பரம் காத்திருத்தலில் 
கனமாகக் கரைகிறது

காதலர்களின் நேரம் !

இருள் கவிந்த இரவின் வரவை 
எதிர்நோக்கிக் கரைகிறது 
ஆந்தை போன்ற ஜந்துக்களின் நேரம் !

கடல் மீண்டு கரை திரும்பும் 
கணவனைச் சேர்ந்திட 
மாலைக் கருக்கலை எதிர்பார்த்து 
கரைகிறது இல்லாளின் நேரம் !

அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட
இவற்றின் காத்திருப்பு வலிகளொன்றும் 
நம்மை வியப்பில் ஆழ்த்துவதில்லை..
பெரிதாய்த் துக்கப் படுத்துவதில்லை !

ஆனால்... 

அன்றாட வாழ்விற்குப் பொருளீட்டிட

பொழுது இருட்டுவதை மட்டுமே 
எதிர்நோக்கிக் கரைகின்ற 
திருடனின் நேரம்,விலை மாதுவின் நேரம் !
இவைகள் மட்டுமே 

இங்கு விசனப் படுத்தும் பொழுதுகளாய்...
காலம் தவிர்க்காத பழுதுகளாய்...
காலமெல்லாம் ஆகிப் போயின !





Tuesday, March 13, 2012

பரிசுத்த நபி மீது பாசம் கொள்வோம்..!


பரிசுத்த நபி மீது பாசம் கொள்வோம்..!

கை கொண்டு சொல்லொணாத் துன்பங்கள் பல தந்திட்ட

பாவிகளையும் மன்னித்தருளிய கருணைக் கடலே…!- அடிமை

பிலால் மீது அளவிலாப் பிரியம் கொண்டு - மாந்தரிடம்

பீடித்திருந்த உயர் குலக் கர்வம் கொன்றவரே....!

புண்ணியம் பெற்ற ஸஹாபாத் தோழர்களை

பூமியோர்க்கு வழிகாட்டும் விண்மீன்களாக ஆக்கிச் சென்றவரே..!.

பெருமையுடன் எளிமையாய் வாழ்ந்திட்ட பெருமானே...!

பேரோங்கும் மிஹ்ராஜ் துவக்கத்தில் - நபிமாரனையோர்க்கும்

பைத்துல் முகத்தஸில் இமாமாகி இறையை வணங்கிய இனியவரே...!

பொற்குணங்களின் தாயகமென்றும் வள்ளலென்றும்- குவலயம்

போற்றிடும் புகழுடன் என்றும் திகழ்பவரே…!

பெளர்ணமி நிலாவையும் மிஞ்சும் ஒளிகொண்டவரே...!

பஃக்தாத் முஹையத்தீன் உள்ளிட்ட இறைநேசர்களின்

பாசத்திற்கும் பிரியத்திற்கும் உரித்தான பண்பாளரே...!


அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!

Saturday, March 10, 2012

மதீனாவிற்குச் செல்லும் வரம் வேண்டும்...


மதீனாவிற்குச் செல்லும் வரம் வேண்டும்...

மக்காவில் வந்துதித்த மாணிக்கக் கோமானே….!

மதீனாவில் உறைகின்ற மாண்புநிறைச் சீமானே…!

தக்காரும் மிக்காரும் இல்லா தகையாளரே..எம்மானே…!

திக்கனைத்தும் தீனுல் இஸ்லாம் பரவச் செய்த எம் பெருமானே….!

திகட்டாத தமிழ்கொண்டு தங்களைப் பாடுகிறேன் அடியேன் நானே…!

மிகைத்திட்ட ஆவலில் தங்களைக் காண விழைகின்றேனே….!

எம் காதல்பிணி தீர மதீனாவிற்கெமை அழைத்திடுவீர் அண்ணலே….!

தங்கள் திருமுகம் தினமும் காணும் வரம் தருவீர் மாமன்னரே…!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!

Saturday, March 3, 2012

நீல வானம்....ஒரு நாளில்

நீல வானம்....ஒரு நாளில் 

ஒரு நாள் முழுதும் அவ்வப் போது

வானத்தையே உற்று நோக்கினேன்.

வானம் என் கற்பனையில் வசப்பட்ட வேளை 

விண்ணழகில் மயங்கிய என்னை விட்டும் 

விரைந்து நீங்கிய என் கவிதை மனம்

விண்ணில் முழு உலா வந்ததன் வெளிப்பாடு இது

ஒரு நாளின் பல சமயங்களில் 

வானத்தின் தன்மை 

என் கற்பனையில் 


அதிகாலை வேளை…


நெடிய விண் சுவருக்கு நீல வெள்ளை அடிக்க
பகலவனுக்கு மேகங்கள் பணி கொடுக்கத் துவங்கும் வேளை
------------------------------------------------------------------------------------------------------------------------
காலை வேளை....


மேகங்களின் மேற்பார்வையில் ஆதவன் விண் சுவற்றில் நீல வெள்ளை பூசி தன் பணி தொடங்கிய வேளை...
---------------------------------------------------------------------------------------------------------------------------
மதிய வேளை...



நீல வண்ண விண் சுவற்றில் மேகங்களின் உத்தரவைப் புறந்தள்ளி
ஆதவன் தன்  சொந்தப் பொன் மஞ்சள் நிறத்தை முழுதாய்ப் பூசிய வேளை
------------------------------------------------------------------------------------------------------------------------------
மாலை வேளை....



வேகத்துடன் நிதானமின்றித் தவறான வண்ணம் பூசி அதனால் பணி இழந்த சூரியன் தலை கவிழ்க்க,, மேகங்கள் தாங்களே விண் சுவருக்கு அடர் நீல நிறம் பூச முடிவெடுத்து அதற்காக லேசான நீல வண்ணப் பட்டி கொண்டு தங்கள் முதல் பூச்சை துவங்கும் வேளை
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இரவு வேளை....


விண் சுவர் முழுதும் அடர் நீலம் பூசி அது கறுத்து மிகவும் இருண்டு
போனதால் வெளிச்சத்திற்காக ஒரு வட்ட நிலவிளக்கு கைகளில்
ஏந்தி விண் சுவர் முழுவதும் ஆங்காங்கே விண்மீன்
ஜிகினாக்களைய்த் தூவி விண் சுவரை அழகுபடுத்திய மேகங்கள் சோர்வுற்று நிலவிளக்கொளியில் ஓய்வெடுக்கும் வேளை…

---------------------------------------------------------------------------------------------------




Tuesday, February 28, 2012

கனிவுடன் மொழிந்திடுவோம் நம் ஸலவாத்தும் ஸலாமும்


கனிவுடன் மொழிந்திடுவோம் நம் ஸலவாத்தும் ஸலாமும்

தரணி முழுமைக்கும் அருள்விளக்காக வந்தவரே -பெற்ற
தாயினும் மேலான பாசம் எம் மீது கொண்டவரே
திருமறையாம் அருள்மறைக் குர்ஆனைத் தந்தவரே
தீனோர்க்குக் காவலராய் என்றும் திகழ்பவரே
துணையில்லா துய்யோன் ஏகன் அல்லாஹ்வின்
தூதராக வந்த தூய்மைநிறை வாய்மையாளரே
தெளிந்த நீரோடையாய் வாழ்ந்து சிறந்தவரே
தேய்மானம் இல்லாத தீன் ஞானம் தந்தவரே
தைரியம் வீரம் விவேகம் செறிந்த மாமன்னரே
தொல்லைகள் தந்திடும் ஷைத்தானையும் எளிதாய்
தோல்வியுற்று புறமுதுகிடச் செய்த மாவீரரே
தெளஹீத் எனும் தீபம் தரணியில் பரவச் செய்த தீரரே
தஃதீர் எனும் தலைவிதியையும் தன் துஆவினால் மாற்ற வல்லவரே
தன்னிகரில்லா தங்க நபியே….! தகைமை நிறை தாஹா ரஸூலே...!
நல்லவர்க்கெல்லாம் நல்லவராம்
நற்குணங்களின் நாயகராம் எங்கள்
கருணை நபிப் பெருமான் முஹம்மதின் மீது
கனிவுடன் மொழிந்திடுவோம் நம் ஸலவாத்தும் ஸலாமும்…!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!

Saturday, February 25, 2012

அஹமது எனும் எம் தாய்...!


அஹமது எனும் எம் தாய்...!

ஆதி இறையோனின் 
அன்பார்ந்த தூதாய்.....

இகமதில் வந்துதித்தார் 
புகழ்நிறை அஹமதாய்...!

விளங்குகிறார் இறையோனின் 
விருப்பம் நிறை ரஹ்மத்தாய்...!

திகழ்கிறார் அவனியில் தீனோரனைவரும் 
உரிமை கொண்டாடிடும் பொதுச்சொத்தாய்...!

மலர்ந்தாரே தீனுல் இஸ்லாமெனும் 
மாபெரும் விருட்சத்தின் ஏக வித்தாய்....!

ஒளிர்ந்தாரே அஹதின் நூராக 
ஆன்மீக ஆழியுறை அழகு முத்தாய்....! 

ஆக்கிச் சென்றாரே நம் அனையோரையும் 
அரும்பேறு பெற்ற தம் உம்மத்தாய்...!

காட்டிச் சென்றாரே கண்ணாடியைப் போல் 
வாழும் நெறி முழுதும் வழிந்தொழுகும் சுன்னத்தாய்....!

நிலவைப் பிழந்தது போல் பல அற்புதங்களை நிகழ்த்தி
கண்டோர் வியந்திடப் பறிமாறினார் காட்சி விருந்தாய்..!

இம்மையிலும் குணம் தந்தாரே இனிதாக
நம் உளப் பிணிகளனைத்தும் நீக்கி மருந்தாய்...!

மறுமையிலும் தவறாது பொழிவாரே 
கருணை மழை நம் மீது ஷஃபாஅத்தாய்...!

அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணலின்
அறிவுரைச் சொல் இனித்திடுமே திகட்டாத அமிழ்தாய்...!

பொற்குணங்களின் தாயக நபி நாயகத்தை புகழ்ந்துருகிப் 
புண்ணியம் பெற்றிடவே மொழியானாளோ நம் தமிழ்த்தாய்....?

மன்னர் முஹம்மதின் அரும் சிறப்புகளனைத்தும்
ஐயமின்றிப் புரிந்திட்டோம் நாம் எளிதாய்....!

இருப்பினும்....

நம்மில் அற்ப மானிடர் சிலர் அஹமது நபிகளின் 
அற்புதங்களை நம்ப மறுக்கின்றனர் முழுதாய் ...!

சற்குண நபிகளின் சரித்திரப் புகழ்தனை
சற்றும் உணராதிருக்கின்றனர் பேதை மனதாய்...!

முப்பொழுதும் பொருந்தும் காரணப்பெயர் கொண்டிலங்கும்
முஹம்மதின் புகழ் பாடுதலை வெறுக்கின்றனர் பழுதாய்...!

தலையும் விலையும் இல்லா தறுதலைகள்
சிலரிங்கு ஆக்கிக் கொண்டனர் தம் மானம் புறத்தாய்...!

தங்கநபிப் புகழ் மறைக்கத் துணிந்த காரணத்தினால் 
தரணியில் அவர் உழல்வர் தீராத பித்தாய்...!

அர்ரஹ்மானின் நேசரே தங்களின் 
அருமைப் பண்புணர்ந்தோம் நாங்கள் இனிதாய்...!

தன்னிகரில்லா தாஹா ரசூலே தாங்கள் தான் -என்றும் எமைத்
தகைமையுடன் நேர்வழி நடத்தும் எம் தாய்....!




Friday, February 24, 2012

என்னவென்று சொல்வதம்மா...?



என்னவென்று சொல்வதம்மா...?

என்னவென்று சொல்வதம்மா அண்ணல் நபிப் பேரழகை...!
சொல்ல மொழி இல்லையம்மா மன்னர் நபி நூரழகை...!
அந்த வெள்ளி முகத்தவரை எம் உள்ளம் நிறைந்தவரை
நான் என்னென்று சொல்வேனோ... அதை எப்படி சொல்வேனோ..?
அவர் தாம் முஹம்மதெங்கள் நபி நாதராம்...!
ஆதி இறையோனின் அன்புநிறைத் தூதராம்...! 


என்னவென்று .....


பொன்னான மேனியின் கஸ்தூரி வாசமே
பூலோகம் மீதினில் பூமாரி வீசுமே
முகவொளி வெள்ளம் பார்த்து வெட்கிப் போகும் வான்மதி 
தகைநிறை உள்ளம் பார்த்து வற்றிப் போகும் நைல்நதி 
ஏந்தல் நபிநேசம் அதுவே எங்கள் சுவாஸம்
அவர் தாம் எங்கள் பாவக் கறைகள் நீக்குவார் 
அடியோரெம்மை சொர்க்கக் கரையில் சேர்க்குவார் 


என்னவென்று .....


மதீனாவில் வாழ்ந்த்திடும் மன்பதையின் காவலர்
நம்நாவில் மொழிந்திடும் ஸலவாத்தின் நாயகர் 
புர்கானை உலகத்தோர்க்கு மறையாகத் தந்தவர்
புவிவந்த தூதர்க்கெல்லாம் தலையாகி நின்றவர் 
அருமை நபி இதயம் ஆன்மீக ஒளியின் உதயம்
அவர் பிறந்த இடம் அரேபியாவின் மக்காவாம்
அவர் தாம் எங்கள் அன்புநிறைத் தாஹாவாம்.....



என்னவென்று சொல்வதம்மா அண்ணல் நபிப் பேரழகை...!
சொல்ல மொழி இல்லையம்மா மன்னர் நபி நூரழகை...!
அந்த வெள்ளி முகத்தவரை எம் உள்ளம் நிறைந்தவரை
நான் என்னென்று சொல்வேனோ... அதை எப்படி சொல்வேனோ..?
அவர் தாம் முஹம்மதெங்கள் நபி நாதராம்...!
ஆதி இறையோனின் அன்புநிறைத் தூதராம்...! 


Thursday, February 23, 2012

இணைய நட்புகளே….! சற்று கவனிப்பீர்…..!


இணைய நட்புகளே….! சற்று கவனிப்பீர்…..!

நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் நமது சமுதாய நிலைமை நாறிப் போன தற்காலத்தில் இணையம் உட்பட அனைத்து ஊடகங்களின் வழியே கண்காட்சிப் பொருளாகக் கவர்ச்சியும் மலிவு விற்பனைப் பொருளாகக் கற்பும் காட்டப் படும் நிலை மாறாத வரை நாம் கண்ணியம், கற்பு நெறி, ஒழுக்கம் இவைகளை எழுத்தில் மட்டுமே காண முடியும் போலிருக்கிறது.

நெடிய இணையப் பாதையில் எப்பொழுதும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் பயணிக்க வேண்டியிருக்கிறது.திரும்பும் திசைகளனைத்திலும் தீயவன் சைத்தானின் வலைப் பின்னல்கள்.கொஞ்சம் பிசகினாலும் நம் ஈமானைப் பறிகொடுக்க வேண்டிய சூழ்நிலை.

இணையத்தில் சமூக வலைத் தளங்களின் உருவாக்கம் பல நன்மைகளைத் தருகின்ற அதே வேளையில் இவ்வகைத் தளங்களால் சில தீய விளைவுகளும் இருக்கத் தான் செய்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.இவை பற்றி விவரிக்க வேண்டிய அவசியமில்லை.அனைவரும் அறிந்ததே.

எனவே, தோழர்கள் இணையப் பாதையில் பயணிக்கும் வேளையில் எப்பொழுதும் விழிப்புடன் செயல்பட்டு காவலாக இறையச்சத்தையும் மற்றும் வழித் துணையாக இறைத் தூதர் நெறிமுறைகளையும் கொண்டு சைத்தானின் சூழ்ச்சிகளை வென்று பயணிக்க வேண்டுகிறேன்.

நட்புடன்
அபுஸாயிமா

Tuesday, February 21, 2012

ஸலவாத்துகளைச் சமர்ப்பிப்போம்



ஸலவாத்துகளைச் சமர்ப்பிப்போம்




த்திய சன்மார்க்கப் போதனை செய்தே - சரித்திரச்

சாதனை நிகழ்த்திட்ட சாந்த நபி இவர்........!

சிறப்பாய் சீராய் வாழ்ந்திட்ட புண்ணிய சீலரிவர்….!

சீக்குகள் நிறைந்திருந்த மாந்தர்தம் உள்ளங்களை

சுத்தக் குர்ஆனின் சுகந்தம் கொண்டு நலமாக்கியவர்.....!

சூழ்ந்திட்ட துன்பங்கள் பகைகள் அனைத்தையும்

செறிந்த வீரத்தால் விவேகத்தால் வென்றவர்..!

சேதாரம் ஏதுமின்றி செழுமையுடன் இஸ்லாம் வளர்த்தவர்..!

சொல் செயல் எண்ணத்தை தூய்மையாய் வைத்துக் கொண்டவர்..!

சோக அனுபவங்களையும் சுகமான வரலாறுகளாய் மாற்றியவர்...!

செளஜன்யமும் சமாதானமும் வாழ்வு நெறியாகக் கண்டவர்..! _ இம்மையின்

சஃக்ராத்து வேளையிலும் உம்மத்தாம் நம் கவலை கொண்டவர்...!

எங்கள் நபி நாதர்…….ஏந்தல் முஹம்மது அவர்கள்..!

சாந்தியும் கருணையும் தம் மீது இறையோனால்

என்றும் மழையாக இறைக்கப் பெறும் சீமானாம்

மதீனாவில் வாழுகின்ற மாண்புயர் கோமானாம்

பாராளும் மன்னரெங்கள் அஹமதின் பாதங்கள் மீது

பாசத்துடன் சமர்ப்பிப்போம் பணிவான நமது ஸலவாத்துகளை...!



Sunday, February 19, 2012

நபி புகழ் பாடுவோம்...நன்மைகளைத் தேடுவோம்


நபி புகழ் பாடுவோம்...நன்மைகளைத் தேடுவோம் 

ண்மணியாம் எங்கள் ரசூல் நாயகமே...!

காசு பணம் நீங்கள் சேர்க்கவில்லை மேதினி வாழ்வினிலே ...

கிழிந்த ஓலை விரிப்புதான் தங்கள் படுக்கை 

கீறல் நிறை மண் குடிலே தங்கள் மாளிகை -இவ்வாறான 

குவலயம் போற்றிடும் தங்கள் எளிமை வாழ்க்கை .

கூறிச் சென்றீர்கள் குர்ஆனும் தங்கள் வழிமுறையும் இனிதாய் -எனினும் 

கெட்ட எமதுள்ளங்களில் அவை நிறைந்திடவில்லை முழுதாய் -அதனாலே 

கேள்விகள் பல எழுப்புகிறோம் இன்று தங்கள் நடைமுறை மீது 

கைகழுவி விட்டோம் தங்கள் மேலான கோட்பாடுகளை 

கொள்கைகள் பலவும் கொண்டோம் சொந்தமாய் -ஆனாலும் 

கோடிகள் எமதாக்கிக் கொண்டோம் தங்கள் மூலமாய் -போலி 

கௌரவம் கண்ட இறுமாப்பில் தங்களை மறந்தோமே அண்ணலே ....!


போதுமே நபி போதம் மறந்த நமது போதனைப் புலம்பல்கள்...

போதுமே அவர் புகழ் மறைத்த நமது இரைச்சல்கள் ....இனியேனும் 

நிறுத்துவோம் இவையனைத்தையும் உண்மை நபிநேசம் கொண்டு 

செலுத்துவோம் நம் சிந்தனையை இறைத்தூதர் வழிமுறை கண்டு 

புண்ணிய வேந்தராம் புகழ்நிறை அஹமதாம் 

மண்ணிலே வந்துதித்த மாந்தர்க்கெல்லாம் மன்னராம் 

கண்மணி எமதருமை நாயகப் பொன்மணியின் 

கண்ணியம் போற்றிடுவோம் வாருங்கள் தோழர்களே....!