Sunday, April 29, 2012

வேர்களை மறந்த விழுதுகள்...!


வேர்களை மறந்த விழுதுகள்...!

  விட்டில்கள் அநேகம் ஒன்று கூடி
  விளக்குகளின் ஒளி அணைத்திட நினைத்ததாம்

   மீன்களனைத்தும் ஒன்று கூடி
   நீர்நிலைகளைப் புறக்கணிக்க நினைத்ததாம்

   மேகங்களனைத்தும் ஒன்றிணைந்து
   வானத்தை விலக்கிவைக்க நினைத்ததாம்

   இவைபோலல்லவா உள்ளன நம்மில் சிலரின்
   நபிகளை,நல்லோர்களை மறந்த சிந்தனைகள்

   இவைபோலல்லவா உள்ளன நம்மில் சிலரின்
   நபி புகழ்,நாதாக்கள் புகழ் மறைத்த போதனைகள்

   மேற்கண்ட முயற்சிகள்தாம் கைகூடுமோ...?
   மேதினியில் வாகைதான் அவை சூடுமோ...?

   வறண்ட மனபூமியின் ஆழம் துளைத்துப் பரவி
   வளமான மண்பூமிமேல் இஸ்லாமிய மரமாய்
   உன்னை நிற்க வைத்தது இறைநேசரெனும் வேரடா...!

   வேர்தனை மறைத்து மண்மீதினில்
   விருட்சமாய் வளர்ந்த இறுமாப்பில்-அடியோடு
   வேரைப் பிடுங்கிட நினைத்தால் வீழ்வாயடா....!

   குர்ஆனும் ஹதீதும் நம் வழிகாட்டிகளென்றாய் நீ ..பின் ஏன்
   குர்ஆனாகவே வாழ்ந்த எம் ஹபீபினைப் புகழ மறுக்கின்றாய் ...?

   சன்மார்க்கக் கடலின் நுரையள்ளிக் குடித்துவிட்டே
   சகலமும் அறிந்ததுபோல் ஆர்ப்பரிக்கும் உனக்கு
 
   ஆன்மீகக் கடலின் ஆழ் முத்தெடுத்த
   அடக்கப் பணிவுநிறை இறைநேசர்களெனும்

   ஆன்றோரின் அறிவுப் புலமைகள்
   அகமிய ஞானங்கள் எங்கனம் விளங்கும்....?

   திரும்பிடுவீர் திசை மாறிச் சென்ற எம் சகோதரர்களே..!
   விரும்பிடுவீர் மேன்மையான நற்செயல்கள் புரிந்திடவே...!
 
   நம் ஈமான்கள் முற்றாய் பாதுகாக்கப் பட்டு
   இகபர வாழ்வினில் இனிதாய் வாகை சூடிட

   இஸ்லாமியராய் நம்மையெல்லாம் திகழச் செய்த
   இறைநேசப் புனிதர்களின் வழி நடப்போம்...!

...................................................................................................................................

No comments: