Sunday, April 1, 2012

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்




காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கல்பு பரிசுத்தம்நிறை
காத்தமுன் நபிகளின்
கனிவான தரிசனம்
கனவினில் கண்டிடவே...!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காரணப் பெயர்கொண்ட
காவிய முஹம்மதெனும்
கருணை வள்ளலின்
கவின்முகம் கண்டிடவே...!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கஷ்டங்கள் நீக்கிடும்
காரண சலவாத்தின்
கருவியாம் அஹமதின்
காதலைப் பெற்றிடவே...!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
கணக்குகள் தீர்க்கப்படும்
கடுமைநிறை மறுமையில் -கைவிடாதெமைக்
கரைசேர்த்திடும் மஹ்மூதரின்
கனிந்த பரிவினை இகத்திலும் பெற்றிடவே...!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காலமுள்ள காலமெல்லாம்
கண்ணியமாய்ப் புகழப்படும்
காருண்ய நபிகளின் கரம்பற்றி முத்தி
கண்களில் ஒற்றிடவே....!

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
காப்போனின் காதலரை
காசினியின் நாயகரை
கண்குளிரக் கண்டு
களிப்பேருவகை கொண்டிடவே...!

காணாப் பிணி கொண்டு
கவிபாடும் இவ்வெளியவன் மீது
கழிவிரக்கம் கொண்டு
கல்பு குளிர்ந்திடக் கனவினில் வருவீரே
கண்கொள்ளாக் காட்சி தருவீரே...!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்…!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஃஹைர ஃகல்கில்லாஹ்..!
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஸைய்யிதுல் அன்பியாயி வல் அவ்லியாயி…!

No comments: