Friday, March 23, 2012

சிந்தனை செய் மனமே….! சீர்மிகும் நபிகளைப் புகழ்ந்திடு தினமே..!


சிந்தனை செய் மனமே….! சீர்மிகும் நபிகளைப் புகழ்ந்திடு தினமே..!

நபியே! உங்களை அல்லாஹ்வின் பால் அவனின் ஏவலைக் கொண்டு அழைக்கும் அழைப்பாளராகவும் ,பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை நாம் அனுப்பியுள்ளோம்).   (அல் குர்ஆன்:33-46)

உங்களின் பால் ஒளியும்,தெளிவான திருவேதமும் வந்துவிட்டது.
                                                   (அல் குர்ஆன்:5-15)

சிந்தியுங்கள்…..மேற்கண்ட திருமறையின் வசனங்களை…..!

சிந்தனை செய் மனமே….! சீர்மிகும் நபிகளைப் புகழ்ந்திடு தினமே..!

மனிதனெனும் படைப்பு
உடலுயிர் இவற்றின் பிணைப்பு !

உடலென்பது சுதேசியாம்
உயிரென்பது விதேசியாம் !

உடலூட்டம் மண்ணகத்து உணவுகளினாலெனில் 
உயிரூட்டம் நபியொளி,திருமறையெனும்
விண்ணகத்து உணவுகளினாலாம்.!

உடல் வளர்த்தல் உலக வாழ்க்கைப் பயனெனில்
உயிர் வளர்த்தல் இகபர வாழ்க்கைப் பயனாம்.!

படைத்தவனின் நெருக்கம் வேண்டுமெனில்
பண்புயர் நபியை உயிரினுமேலாய் நேசியுங்கள்…!

அதிபதியின் சுவனபதிப் பேற்றை அடைந்திட
மதிநபியின் மொழியமுதம் நாளும் வாசியுங்கள்…!

இறை தந்த அருட்கொடையாம்
திருமறையை இனிதே நமக்கீந்து

அருள்மறையாகவே முற்றிலும்
அவனியில் வாழ்ந்து காட்டிய

அண்ணலின் ஸுன்னத்தை
உயிர்வளியாய் சுவாசியுங்கள்..!

அஹமதைப் புறந்தள்ளி
ஆண்டவனை நெருங்கிடலாமென்று
இகமதில் நிகழாச் சொப்பனம் காணாதீர்..!

முஹம்மதிய அருட்கோலம் களைந்து- இழிந்த
முஷ்ரிக்கெனும் இருட்கோலம் பூணாதீர்..!

பொய்ஜாலங்களில் உலகைக் கவர்ந்தது போதும் ! -இனியேனும்
மெய்வழி நடக்க கைப்பிடிப்போம் மன்னர் நபி போதம்..!

முன்பின் இலா மூத்தோனும் புகழ்கின்ற
முத்து முஹம்மதைப் புகழ்ந்திடுவோம் அனுதினமும்…!

மன்னவனும்,விண்ணவரும் மாசற்ற நபி மீது
மகிழ்ந்து மொழிந்திடும் மகிமைநிறை ஸலவாத்தை

மனதுடனே நாமும் மொழிகின்ற எந்நாளும்
மண்ணகத்தில் நமக்குப் பொன்னாளாம்…திருநாளாம்..!

ஸல்லல்லாஹு..அலா…முஹம்மத் 
ஸல்லல்லாஹு…அலைஹி…வஸல்லம்..!

ஸல்லல்லாஹு…அலா…..முஹம்மத் 
ஸல்லல்லாஹு…அலைஹி….வஸல்லம்..!

ஸல்லல்லாஹு…அலா….முஹம்மத் 
யா ரப்பி ஸல்லி அலைஹிவஸல்லம்..!

No comments: