Saturday, March 3, 2012

நீல வானம்....ஒரு நாளில்

நீல வானம்....ஒரு நாளில் 

ஒரு நாள் முழுதும் அவ்வப் போது

வானத்தையே உற்று நோக்கினேன்.

வானம் என் கற்பனையில் வசப்பட்ட வேளை 

விண்ணழகில் மயங்கிய என்னை விட்டும் 

விரைந்து நீங்கிய என் கவிதை மனம்

விண்ணில் முழு உலா வந்ததன் வெளிப்பாடு இது

ஒரு நாளின் பல சமயங்களில் 

வானத்தின் தன்மை 

என் கற்பனையில் 


அதிகாலை வேளை…


நெடிய விண் சுவருக்கு நீல வெள்ளை அடிக்க
பகலவனுக்கு மேகங்கள் பணி கொடுக்கத் துவங்கும் வேளை
------------------------------------------------------------------------------------------------------------------------
காலை வேளை....


மேகங்களின் மேற்பார்வையில் ஆதவன் விண் சுவற்றில் நீல வெள்ளை பூசி தன் பணி தொடங்கிய வேளை...
---------------------------------------------------------------------------------------------------------------------------
மதிய வேளை...



நீல வண்ண விண் சுவற்றில் மேகங்களின் உத்தரவைப் புறந்தள்ளி
ஆதவன் தன்  சொந்தப் பொன் மஞ்சள் நிறத்தை முழுதாய்ப் பூசிய வேளை
------------------------------------------------------------------------------------------------------------------------------
மாலை வேளை....



வேகத்துடன் நிதானமின்றித் தவறான வண்ணம் பூசி அதனால் பணி இழந்த சூரியன் தலை கவிழ்க்க,, மேகங்கள் தாங்களே விண் சுவருக்கு அடர் நீல நிறம் பூச முடிவெடுத்து அதற்காக லேசான நீல வண்ணப் பட்டி கொண்டு தங்கள் முதல் பூச்சை துவங்கும் வேளை
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இரவு வேளை....


விண் சுவர் முழுதும் அடர் நீலம் பூசி அது கறுத்து மிகவும் இருண்டு
போனதால் வெளிச்சத்திற்காக ஒரு வட்ட நிலவிளக்கு கைகளில்
ஏந்தி விண் சுவர் முழுவதும் ஆங்காங்கே விண்மீன்
ஜிகினாக்களைய்த் தூவி விண் சுவரை அழகுபடுத்திய மேகங்கள் சோர்வுற்று நிலவிளக்கொளியில் ஓய்வெடுக்கும் வேளை…

---------------------------------------------------------------------------------------------------




No comments: