Saturday, February 25, 2012

அஹமது எனும் எம் தாய்...!


அஹமது எனும் எம் தாய்...!

ஆதி இறையோனின் 
அன்பார்ந்த தூதாய்.....

இகமதில் வந்துதித்தார் 
புகழ்நிறை அஹமதாய்...!

விளங்குகிறார் இறையோனின் 
விருப்பம் நிறை ரஹ்மத்தாய்...!

திகழ்கிறார் அவனியில் தீனோரனைவரும் 
உரிமை கொண்டாடிடும் பொதுச்சொத்தாய்...!

மலர்ந்தாரே தீனுல் இஸ்லாமெனும் 
மாபெரும் விருட்சத்தின் ஏக வித்தாய்....!

ஒளிர்ந்தாரே அஹதின் நூராக 
ஆன்மீக ஆழியுறை அழகு முத்தாய்....! 

ஆக்கிச் சென்றாரே நம் அனையோரையும் 
அரும்பேறு பெற்ற தம் உம்மத்தாய்...!

காட்டிச் சென்றாரே கண்ணாடியைப் போல் 
வாழும் நெறி முழுதும் வழிந்தொழுகும் சுன்னத்தாய்....!

நிலவைப் பிழந்தது போல் பல அற்புதங்களை நிகழ்த்தி
கண்டோர் வியந்திடப் பறிமாறினார் காட்சி விருந்தாய்..!

இம்மையிலும் குணம் தந்தாரே இனிதாக
நம் உளப் பிணிகளனைத்தும் நீக்கி மருந்தாய்...!

மறுமையிலும் தவறாது பொழிவாரே 
கருணை மழை நம் மீது ஷஃபாஅத்தாய்...!

அகிலத்தின் அருட்கொடையாம் அண்ணலின்
அறிவுரைச் சொல் இனித்திடுமே திகட்டாத அமிழ்தாய்...!

பொற்குணங்களின் தாயக நபி நாயகத்தை புகழ்ந்துருகிப் 
புண்ணியம் பெற்றிடவே மொழியானாளோ நம் தமிழ்த்தாய்....?

மன்னர் முஹம்மதின் அரும் சிறப்புகளனைத்தும்
ஐயமின்றிப் புரிந்திட்டோம் நாம் எளிதாய்....!

இருப்பினும்....

நம்மில் அற்ப மானிடர் சிலர் அஹமது நபிகளின் 
அற்புதங்களை நம்ப மறுக்கின்றனர் முழுதாய் ...!

சற்குண நபிகளின் சரித்திரப் புகழ்தனை
சற்றும் உணராதிருக்கின்றனர் பேதை மனதாய்...!

முப்பொழுதும் பொருந்தும் காரணப்பெயர் கொண்டிலங்கும்
முஹம்மதின் புகழ் பாடுதலை வெறுக்கின்றனர் பழுதாய்...!

தலையும் விலையும் இல்லா தறுதலைகள்
சிலரிங்கு ஆக்கிக் கொண்டனர் தம் மானம் புறத்தாய்...!

தங்கநபிப் புகழ் மறைக்கத் துணிந்த காரணத்தினால் 
தரணியில் அவர் உழல்வர் தீராத பித்தாய்...!

அர்ரஹ்மானின் நேசரே தங்களின் 
அருமைப் பண்புணர்ந்தோம் நாங்கள் இனிதாய்...!

தன்னிகரில்லா தாஹா ரசூலே தாங்கள் தான் -என்றும் எமைத்
தகைமையுடன் நேர்வழி நடத்தும் எம் தாய்....!




No comments: