பாவத்தின் பரிதாப ஓலம்
கற்பனைகள் என்னுள் பற்பலவாய் கனிந்தாலும்
கவிதையாய் அவை கருக்கொள்ள மறுக்கின்றன.
சிந்தனைகள் பலவும் எனை செதுக்கிடத்தான் வந்தாலும்
நிந்தனைகளாகவே எனக்கவை நித்தமும் தோன்றுகின்றன.
ஏனிந்த இயலாமை..?
எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன்
விளங்கியது விந்தை இன்று...
மனம் போன போக்கில் நடக்கின்றேன்.....ஆம்
மனோ இச்சையின் பிடியில் இருக்கின்றேன்...
மனிதம் மறந்தும் மரத்தும் போய்விட்ட
மாக்களின் உலகில் நானும் ஓர் அங்கமாகிவிட்டேனே...என்செய்வேன்?
சொன்னார்கள் நபிநாதர் அன்றே
எண்ணம் சொல் செயல் தூய்மையே
மனிதனை புனிதனாக்குமென்றே.....
செருக்கால் அதை விடுத்து
சுகபோக வாழ்வில் லயித்து
சீர் கெட்டுப் போய்விட்டேன்.....அந்தோ!
மருந்தென்ன இந்நோய்க்கு?.......
மாநபியின் வழிநடந்து
நப்செனும் இச்சையை
நசுக்கிக் கொன்று....
அன்பெனும் உரமிட்டு
பேதமெனும் களை நீக்கி
மனித நேயமெனும் நீர் வார்த்து........அதனால்
செழித்தோங்கும் மனிதமெனும்
விருட்சம் வளர்ப்போம்
வாருங்கள் தோழர்களே....!
----------------------------------------------------------------------------
No comments:
Post a Comment