அகிலம் போற்றும் அருமை நபிகள் நாயகம்(ஸல்)
அகிலத்தோர்க்கு அருட்கொடையாய்
அவனியில் வந்துதித்து
ஆதமின் மக்களனைவரிடமும்
ஆட்கொண்டிருந்த அறியாமைக் கறைகளனைத்தும்
இல்லாதொழித்து அவர்தம்
இம்மையும் மறுமையும்
ஈகைநிறை இறைவன் முன்னில்
ஈட்டுத்தரும் வெற்றிகளாய்
உறுதிப் பிரமாணம் தந்து அவரின்
உள்ளமதை ஒளிவாக்கி- இஸ்லாத்தின்
ஊன்றிப் பிடிக்கும் வேர்களாய்
ஊக்கம்நிறை தீரர்களாய் உருவாக்கி-அவர்தம்
எண்ணவியலா தியாகங்களனைத்தும்
என்றும் தீனுல் இஸ்லாத்திற்காய்
ஏகத்துவம் தரணியில் படர்வதற்காய்
ஏற்று மனமுடன் ஈந்தச் செய்து
ஐயமற்ற அரும் வாழ்க்கை நெறியை
ஐந்து கடமைகளில் இனிதே மொழிந்து-மேதினியில்
ஒப்பிலா ஓரிறைக் கொள்கை ஊன்றி
ஒப்பற்ற மனிதப் புனிதராய் வாழ்ந்து
ஓய்வின்றி உம்மத்திற்காய் தன் உழைப்பை ஈந்து
ஓங்குபுகழ் குர்ஆனை உலகப் பொதுமறை ஆக்கி
ஒளடதமாய் இம்மையில் நம் உள்ளப் பிணிகள் நீக்கி-மேலும்
ஒளடதமாய் நம்மின் மறுமைத் துயரங்களும் நீக்கவிருக்கும்
அருமை நபி நாதர் எங்கள் மஹ்மூதாம்
முத்து முஹம்மது அவர்கள் மீது
மொத்தமாய்ப் பொழியட்டும் என்றென்றும்
இறையோனின் இனிய சலாம்கள்...
---------------------------------------------------------------
No comments:
Post a Comment